பெண் சுதந்திரம் எனப்படுவது இது தானா?
ஆடைகளை களைவதும் யாரும் யாருடனும் செல்லலாம் என்பது மட்டும் தான் பெண்ணுரிமையா?
தான் சுதந்திரமானவள் என்று சொல்லும் ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் திரைப்படத்தில் நடிக்கிறாள். அதன் போஸ்டர் ஒட்டப்படுகிறது். அந்த போஸ்டர் ஆபாசமானது என்று கூறி வேறு சில பெண்கள் அதை கிழித்தெறிகிறார்கள் அல்லது அதன் மீது தார் பூசுகின்றனர். இதில் நடித்த பெண்ணின் உரிமை பாதிக்கப்படுகிறதா என எனக்கு புரியவில்லை. பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கொண்டாடப்படும் இந்த மகளிர் தினத்தில் ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை என்ற முழக்கம் மட்டுமே ஒலிக்கின்றது.
என்னை பொறுத்தவரை பெண்ணுக்கு பெண் தான் எதிரி.
முதலில் பெத்ததும் பெண் குழந்தை, இப்பொழுது பெத்ததும் பெண் குழந்தையா? என்ற மாமியாரின் அதட்டலின் காரணமாக மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்துவிட்டால் அதன் வாயில் நெல்மணியையோ கள்ளிப்பாலையோ ஊற்றி அந்த பச்சிளங்குழந்தையை கொல்வது தாய் எனும் பெண் தான்.
எனது மூத்த மகனுக்கு இவ்வளவு வாங்கினேன், எனவே நீயும் வாங்கி வா என மருமகளை கொடுமைபடுத்துவதும் மாமியார் எனும் பெண் தான். ஸ்டவ் வெடிப்பதற்கு முக்கிய காரணம் மாமியார் எனும் பெண் தான். வரதட்சணைக்கு முக்கிய காரணம் மாமியார் எனும் பெண் தான். எனவே நான் மாமியாராகும் பொழுது எனது மருமகளை இவ்வாறு கொடுமைப்படுத்தமாட்டேன் என இன்றைய மருமகள்கள் இந்த மகளிர் தினத்தில் முடிவெடுக்க வேண்டும்.
அடுத்ததாக திருமணமான ஒருவனுடன் கள்ளத்தனமாக உறவு வைத்து இன்னொரு பெண்ணின் வாழ்வை சீரழிப்பது இன்னொரு பெண்ணே. என்னுடைய மனைவியை நீ எப்படி அனுபவிக்கலாம் என்று கணவன் கத்தியை எடுக்கிறான். அல்லது நமது உறவு கணவனுக்கு தெரிந்து விட்டதே என எண்ணி கணவனுக்கு எதிராக கள்ளகாதலர்கள் கத்தியை எடுக்கின்றனர். பெண்ணால் தான் உயிர்பலி ஏற்படுகின்றது. சில இடங்களில் கள்ளகாதல் காரணமாக மனைவியை விட்டு கணவன் பிரிந்து விடுவதால் மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள்.
எனவே முறையாக திருமணம் செய்யாமல் இன்னொரு பெண்ணின் கணவனுடன் தொடர்பு வைக்க மாட்டேன் என்று இந்த மகளிர் தினத்தில் பெண்கள் முடிவெடுக்க வேண்டும்.
இன்று வயதான தாய்மார்கள் ரோடுகளில் பிச்சை எடுத்து திரிவதற்கும் பிளாட்பார்மில் தங்குவதற்கும் மருமகள் என்ற பெண்தான் காரணம். எனது கணவனின் தாயை எனது தாயை போன்று கவனிப்பேன் என ஒவ்வொரு மருமகளும் நினைப்பார்களானால் இன்று தெருக்களில் பிச்சை எடுக்கும் பெண்மணிகளை பார்க்கவே இயலாது. எனவே இந்த மகளிர் தினத்தில் அந்த நல்முடிவை மருமகள்கள எடுக்க வேண்டும்.
இதைத்தவிர ஆணாதிக்கம், ஆணாதிக்கம் என்று வெற்றுக் கூச்சல் போட்டு விட்டு அன்று ஒருநாள் மட்டும் கூடிக்கலைவதால் யாருக்கேனும் பயனுண்டா?
--படுகைக்காக ராஜா