Page 1 of 1

மனவளக்கலை பயிற்சியாளர்கள் புகை பிடிக்கக் கூடாது என்னும் விஷயத்தில் நீங்கள் ஏன் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறீர்கள்?

Posted: Wed Sep 14, 2016 2:07 pm
by marmayogi
கேள்வி: மனவளக்கலை பயிற்சியாளர்கள் புகை பிடிக்கக் கூடாது என்னும் விஷயத்தில் நீங்கள் ஏன் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறீர்கள்?

பதில்: புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மனவளக்கலை கற்றுக் கொடுக்கவே கூடாது. மனவளக்கலையானது ஒரு அற்புதமான பயிற்சி. வித்து சக்தியின் இருப்பளவை அது அதிகரித்துத் தரும். உடல் செல்களையும், உயிர் சக்தியையும், மனதையும் ஒருங்கிணைக்கக் கூடியது மனவளக்கலை.

அந்த மூன்றையும் எரிவு நிலை என்னும் வேக இயக்கத்தில் இருந்து சாதாரண நிலைக்கு மனவளக்கலை கொண்டுவந்து விடும். புகையிலையில் உள்ள நிக்கோட்டின் என்ற நச்சுப் பொருள் ஜீவவித்துக் குழம்பின் சுரப்பினை வறட்சியுறச் செய்து விடுகிறது. அது மனித உடலின் மொத்த இயக்கத்தையும் பழுதுறச் செய்து விடுகிறது.. எனவே மனவளக்கலையும் பயில்வது, புகையும் பிடிப்பது என்பது எப்படிப்பட்டது என்றால், ஓட்டை உள்ள ஒரு பாத்திரத்தில் நீர் சேமிப்பது போல் ஆகும்.

எல்லா வகையிலும் மனிதனின் ஆளுமைப்பேற்றை அதன் முழுமை அளவுக்கு வளர்த்துக் கொள்வது என்பது மனவளக்கலையின் நோக்கம். மனவளத்திலும், ஆன்மீகத்திலும் உடல் நலத்திலும், சமுதாய இணைப்பிலும், பொருளாதார மேம்பாட்டிலும் மனிதன் உயர்வடைந்து வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் அடைய உதவுவது மனவளக்கலை.

இவ்வளவு மேம்பாட்டையும் அடைவதற்கு புகை பிடித்தலை விடமாட்டேன் என்றால் என்ன பொருள்? புகை பிடித்தலை விடுதல், வேண்டாத பேர்களின் சிநேகத்தை விடுதல், வேண்டாத பொருட்களை விடுதல், வேண்டாத அனுபவங்களை விடுதல் இதெல்லாம் ஆன்ம தூய்மைக்கும், அறிவு மேம்பாட்டிற்கும் உரிய முன் நிபந்தனைகள் ஆகும். ஒருவரால் புகைப் பிடிப்பதை எளிதில் விட முடியும். ஆகவே தான் புகை பிடித்தல் விஷயத்தில் நான் அவ்வளவு கண்டிப்பாக இருக்கிறேன்.

மனவளக்கலைஞர்கள் மனவளக்கலையின் உயர்வைத் தெரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய எண்ணம், சொல், செயல்களின் தரத்தை மாற்றிக் கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவும் அவர்கள் தயாராக் இருக்க வேண்டும். புகைப்பதை விடுங்கள்; அல்லது மனவளக்கலையை விட்டு விடுங்கள். புகை, யோகம் இந்த இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் புகைக்கும், யோகத்திற்கும் ஒத்துக் கொள்வது இல்லை. அவை இரு துருவங்கள் மாதிரி. ஒன்று இருக்கும் இடத்தில்
இன்னொன்றால் இருக்க முடியாது.
வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி