Page 1 of 1

மரண பீதியை கிளப்பும் நிபா வைரஸ்... தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?

Posted: Wed May 30, 2018 12:37 pm
by SUGAPRIYA
கடந்த சில தினங்களில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் மட்டும் இதுவரை 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த திடீர் இறப்புக்குக் காரணம் நிபா வைரஸ் தான் என்று அந்த மாநில அரசு உறுதி செய்துள்ளது.

இதையடுத்து தேசிய நோய் கட்டுப்பாட்டு குழு ஒன்று கேரளாவுக்கு விரைந்துள்ளது. சரி. இந்த நிபா வைரஸ் என்பது என்ன? எப்படி பரவுகிறது?... எப்படி இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

நிபா வைரஸ்

நிபா வைரஸ் என்பது விலங்குகளில் வழியாக விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சில கொடிய நோய்களைப் பரப்பும் வைரஸ் கிருமி். இந்த வைரஸ் மூலம் மனிதர்களுக்கு மட்டுமோ அல்லது விலங்குகளுக்கு மட்டுமோ தான் நோய் ஏற்படும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. விங்குகளின் மூலம் மனிதர்களுக்கும் பரவக்கூடியது.

எந்த விலங்கு

விலங்குகளில் இருந்து பரவுகிறது என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் எந்த விலங்கிலிருந்து இது ஆரம்பிக்கிறது என்று பார்த்தால், இந்த நிபா வைரஸ் பொதுவுாக, பழந்தின்னி வௌவாலில் இருந்து மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவுகிறது. இதேபோல் பன்றியின் மூலமாகப் பரவுகிறது என்றும் சொல்லப்படுகின்றனவே தவிர, மற்ற விலங்குகளிடம் இருந்து பரவுவதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது

எப்படி பரவுகிறது?


பழம் தின்னி வௌவால்கள் மற்ற விலங்குகளைக் கடித்தாலும் அல்லது அதள் சலைவாய் பட்டாலும் இந்த நிபா வைரஸ் பரவும். விலங்குகளின் சிறுநீர், சலைவாய் போன்ற திரவங்களின் வழியாக, மற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களுடைய சிறுநீர், வேர்வை, சலைவாய் ஆகியவற்றின் மூலம் உடன் இருக்கும் மற்ற மனிதர்களுக்கு இந்த நிபா வைரஸ் பரப்பப்படுகிறது. பழந்தின்னி வௌவால்களோ அல்லது மற்ற பறவைகளோ சாப்பிட்ட பழங்களை சாப்பிட்டாலும் இந்த நிபா வைரஸ் பரவும்

அறிகுறிகள்

இந்த நிபா வைரஸால் பாதிக்கபட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல், கடுமையான தலைவலி, மயக்கம், வாந்தி ஆகியவை ஏற்படும். உடலில் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சிலருக்கு, வலிப்பு கூட வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த நிபா வைரஸ் தாக்கினால் அதன் பாதிப்புகள் கிட்டதட்ட 15 நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புண்டு. இந்த வைரஸ் தாக்கப்பட்டால், நினைவிழப்பு, மூளைக்காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு, மரணம் வரை கொண்டுபோய் விடும் என அச்சுறுத்தப்படுகிறது. இந்த நிபா வைரஸின் தாக்குதல் ஏற்பட்டால் அதிலிருந்து 30 சதவீதம் வரை மட்டுமே காப்பாற்றுவதற்கான வழிகள் இருப்பதாகவும் அச்சுறுத்தப்படுகிறது

வராமல் தடுப்பது எப்படி?

விலங்குகள் மற்றும் பறவைகள் கடித்த பழங்களை தவறிக்கூட சாப்பிட்டு விட வேண்டாம். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒருவேளை சந்திக்க நேர்ந்தால், பின்னர் உடனடியாகக் கைகளை சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். நோயாளிகளுக்கு உதவும்போதோ, சிகிச்சை அளிக்கும்போதோ முகத்துக்கு முகமூடியும் கைகளுக்கு கையுறையும் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதற்கு முன்பாக வெந்நீரில் கழுவுங்கள். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுத்தால் அது மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கும். வைரஸ் தொற்று ஏற்பட்டவுடனேயே சிகிச்சையை எடுத்துக் கொண்டால், இறப்பை தவிர்க்க முடியும்.

இந்தியாவுக்குப் புதுசா?..


இந்த நிபா வைரஸ் இந்தியாவுக்கு இது முதல் முறையாக வந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தென் தமிழகத்துக்கு இதுதான் முதல் முறை. கடந்த 2001 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இந்த வைரஸ் தாக்குதல் இருந்தது. இதில் 65 பேர் பாதிக்கப்பட்டு, 45 பேர் மரணம் அடைந்தனர். அதேபோல், 2007 ஆம் ஆண்டு அதே மேற்கவங்கத்தில் நாதியா பகுதியில் 5 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு, சில வருடங்கள் கழித்து, 2013 ஆம் ஆண்டு மீண்டும் அதே மேற்கு வங்கத்தில், பாதிக்கப்பட்ட 24 பேரில், 21 பேர் உயிரழந்த சோகம் நடைபெற்றுள்ளது. அதன்பின், இந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்து, உயிரிழப்பு நடக்கிறது.