ஐந்து பூதங்கள் மூன்று சுழற்சி முறையில் இயங்குகின்றன. அவை சரியான முறையில் இயங்கினால் ஆரோக்கியம். சுழற்சியில் ஏற்படும் குழப்பம் நோய். ஆகையால், அக்குபஞ்சர் முறையில் நோய்களைக் குணப்படுத்த முதலில் நமக்கு பஞ்சபூதங்களின் சுழற்சியினைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், முன்பு பார்த்த 60 பஞ்சபூதப் புள்ளிகள் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் சிகிச்சியினை சிறப்பாக செய்ய முடியும்.
பஞ்சபூதச் சுழற்சியினை மூன்றாகப் பிரித்துள்ளனர். அவை, ஆக்கச் சுழற்சி, கட்டுப்படுத்தும் சுழற்சி மற்றும் எதிர்வினைச் சுழற்சி. கட்டுப்படுத்தும் சுழற்சி மற்றும் எதிர்வினைச் சுழற்சியினை நன்மைச் சுழற்சியாக பார்ப்பதோடு, அவற்றினை நாம் நோய் தீர்க்கும் சிகிச்சை சுழற்சியாக
அக்கு பஞ்சரில் பயன்படுத்தலாம்.
குறிப்பு : காற்றினை Metal என்று சீனத்தில் குறிப்பிட்டுள்ளார்கள், ஆகையால் பல இடங்களில் அவ்வாறு இருக்கலாம். நீங்கள் Metal என குறிப்பிடப்படுவது காற்றினைத்தான் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.
ஒர் பூதம் மற்றொரு பூதத்தினை படைக்கும் இயக்கம், ஒர் தொடர் வரிசைச் சுழற்சியாக நடக்கிறது. இதனை ஆக்கச் சுழற்சி என்கிறோம். அதாவது, நிலம் > காற்றினை படைக்கிறது, காற்று > நீரினைப் படைக்கிறது, நீர் > மரத்தினைப் படைக்கிறது , மரம் > நெருப்பினைப் படைக்கிறது, நெருப்பு > நிலத்தினைப் படைக்கிறது.
தெளிவாகச் சொன்னால், நீர் மூலம், மரங்கள் வளமாக வளர்கின்றன. மரங்கள் காய்ந்து கட்டையாகவும் சருகாவும் மாறினால், நெருப்பு நன்றாகச் செலுமையாக எரிகிறது. நெருப்பு எரிந்து முடிந்தால், கடைசியில் சாம்பல் மண் ஆகிறது. மண் வாசனை என்றுச் சொல்வோம்.. அதாவது மண்ணுக்குள்ளே பல வாயுக்கள் உருவாகின்றன, அது மண்ணோடு உலோகத் தாதுக்களாக மாறுகின்றன.. அதனை உலோகம் என்ற அடிப்படையில் சீனத்தில் Metal என்று குறிப்பிட்டுள்ளார்கள். நமது ஊர் அக்குப்பஞ்சர்சிட் ஆசான்கள் தான், உலோகத்திற்கு முன் வாயுக்கள் தான் என்று பஞ்ச பூதத்தில் Metal/உலோகத்தினை காற்று என குறிப்பிட்டார்கள். தென்றல் காற்று வீச, மேகங்கள் மழையாகப் பொழிந்து நீர் ஆகிறது, புயல் வந்தால் மழை வந்துவிடும் என்பதும் நமக்கு ஆக்கச் சுழற்சியினை எளிதாகப் புரிந்து கொள்ள வசதியாக இயற்கை உள்ளது. மழை பொழிய மரங்கள் செழிப்பாக வளர்கின்றன. இது அக்கப்பஞ்சர் வரையறுத்த பஞ்சபூத ஆக்கச் சுழற்சி.
அடிப்படையாக பஞ்ச பூதங்கள் எவ்வாறு உருவாகின என்பதன் எனது கருத்தினை ஒர் பதிவில் இரண்டு வருடத்திற்கு முன் பதிந்துள்ளேன்.. அந்த என் கருத்துப்படி, இல்லா இருப்பிலிருந்து முதலில் கண்ணால் பார்க்க முடியா காற்று என்ற பூதமே முதலில் தோன்றியது. இல்லாமையும் இருப்புமே இயக்கத்திற்கான அடிப்படை. இருப்பாகிய காற்று இல்லா சக்தியினூடே அங்கும் இங்குமாய் இயங்க ஆரம்பித்தது. அந்த இயக்கம் தாங்காமல் காற்றினை அழிக்க வெப்பத்தினை உருவாக்கி நெருப்பு என்ற பூதத்தினை உருவாக்கியது. தீ எரிய காற்று வேண்டும். தீ எரிந்து வெப்பம் அதிகம் ஆக ஆக, காற்று குறைந்து போக... நெரிப்பின் ஆதிக்கத்தினை ஓடுக்க நீர் என்ற பூதம் உருவாகியது. கடுமையான கோடைக்காலத்தில் வெப்பம் இருக்கும் காற்றுக்களை சாப்பிட்டுவிடுவதனால் தான் அப்பகுதில் காற்று குறைகிறது... அதனைச் சமநிலைப்படுத்த வெப்பத்தினை தாங்கி அதிக காற்றுள்ள பகுதியான கடல் பகுதியிலிருந்து காற்று வேகமாக புயலாக வந்து காற்றின் குறைபாடினை சமநிலைப்படுத்த முயல்கிறது. அதே நேரத்தில் மழையும் பெய்து வெப்பத்தின் தாக்கத்தினையும் குறைத்துவிடுகிறது என்ற இயற்கை நிகழ்வுகளை நினைவில் கொள்ளுங்கள். முன் காலத்தில் மழை நீண்ட காலம் பெய்யாமல் இருந்தால் கொடும்பாவி எரிக்கும் வழக்கம் இருந்தது. இன்றும் கிராமங்களில் இந்த வழக்கு இருக்கலாம். நான் அறிந்து எனது ஊரில் 1996 - 2000 ஆகிய காலக்கட்டத்தில் மழை வேண்டி கொடும்பாவி எரித்துள்ளார்கள். நீர் அதிகம் ஆகிவிட்டால் வெப்பத்தினை அழித்து குளிர்ச்சியும்... அதன் தொடர்ச்சியாக பனிக்கட்டியாகவும் மாற ... வெப்பமும் நீரும் காற்றும் தன்னைக் காத்துக் கொள்ள நிலம் என்ற புதிய பூதத்தினை உருவாக்கியது. நிலத்தில் ஐம்பூதங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து இயற்கை உருவாகியது. இயற்கை உயிரினங்கள் பிறப்பிடமாகியது. பூமியின் அடியில், நெருப்புக் குழம்பு - வாயுக்கள் - நீர் - பாறை(மண்)- மற்றும் கண்டிப்பாக ஆகாயமாகிய வெற்றிடமும் இருக்கிறது. பூமி வெளியிலும் ஐம்பூதங்கள் இருக்கிறது. பிரபஞ்சமும் ஐம்பூதமே என்று அண்டமும் பிண்டமும் ஒன்று என நம்முன்னோர்கள் கூறிவிட்டார்கள்.
அக்குபஞ்சர் ஆக்கச் சுழற்சியினை தாய் சேய் என்ற விகித்தல் ஒவ்வொரு பூதத்திற்கும் தாயாக அதன் ஆக்க பூதத்தினை பார்க்கலாம். அதாவது,
நிலம் தாய் என்றால் அதன் சேய் காற்று
காற்று தாய் என்றால் அதன் சேய் நீர்
நீர் தாய் என்றால் அதன் சேய் மரம்.
மரம் தாய் என்றால் அதன் சேய் நெருப்பு.
நெருப்பு தாய் என்றால் அதன் சேய் நிலம்.
நீரின் தாய் காற்று, நெரிப்பின் தாய் மரம் என்ற ரீதியிலும் அக்குப்பஞ்சர் ஆக்கச் சுழற்சியினை நினைவில் கொள்ளுங்கள்.
கட்டுப்பாட்டு சுற்று/அழிக்கும் சுற்று
ஆக்கம் சுற்று ஒர் வட்டமிட்டோம். அதில் ஒர் ஐந்துமுக நட்சத்திரமாக வருவது கட்டுப்பாட்டு சுற்று. ஆச்சி-பேத்தி என்ற ரீதியில் வரைந்தால் சரியாக இருக்கும்.
நிலம் ஆச்சி என்றால் அதன் பேத்தி, காற்றின் பிள்ளையாகிய நீர்.
காற்று ஆச்சி என்றால் அதன் பேத்தி, நீரின் பிள்ளையாகிய மரம்.
நீர் ஆச்சி என்றால் அதன் பேத்தி, மரத்தின் பிள்ளையாகிய நெருப்பு.
மரம் ஆச்சி என்றால் அதன் பேத்தி, நெருப்பின் பிள்ளையாகிய நிலம்.
நெருப்பு ஆச்சி என்றால் அதன் பேத்தி, நிலத்தின் பிள்ளையாகிய காற்று.
இப்பொழுது ஆச்சியிலிருந்து பேத்திக்கு ஒர் அம்பு குறியிட்டால், நட்சத்திர வடிவிலான கட்டுப்பாட்டு/அழிக்கும் சுற்று வந்துவிடும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதைப்போல் தான் இங்கும் நன்மை தீமை என்பன ஏற்படுகின்றன.
நிலம்/மண் காற்றாக ஆக்கச் சுற்றில் மாறுகிறது. இந்த கூடுதல் மண், தன் பேத்தியாக நீர்க்கு போகும் பொழுது, நீரினை பாதுகாத்து தேக்கி வைக்கும் அரணாக நலன். நீர் கொஞ்சமாக இருக்கும் சூழலில் அதிக மண் சென்றால், அங்கிருக்கும் நீரினை சேறாக்கும்... நீரே இல்லாமல் ஆழ்த்துவிடும் தீமை.
காற்று மரத்திற்கு செல்லும் பொழுது தென்றல் காற்றாக நலன், அதிக காற்று சென்றால், சூறாவளிக் காற்றாக மரங்களை தாக்கி அழித்துவிடும்.
நீர் மென்மையாக எண்ணைய்த்தன்மையுடன் சீராக தீபமாக ஏற்ற பயன்படுகிறது, அதுவே நீர்மை அதிகமாகிவிட்டால் நெருப்பினை அனைத்துவிடும்.
மரம் நிலங்களில் இருக்கும் பொழுது அதன் நிலச்சரிவிலிருந்து பாதுகாக்கிறது, அதுவே நிலம் முழுமையும் அடைத்துவிட்டால் அதன் கழிவுகளால் மண் கெடுகிறது.
நெருப்பு அளவாக இருந்தால் காற்றின் இயக்க வேகத்திற்கு பலனாக இருக்கும், அதுவே அதிகமானல் காற்றினை தாக்கி சூறாவளிக்கு வழிவகுத்துவிடும்.
ஆகையால், பேத்தியின் செயல்பாட்டினை சிறப்பாக்க ஆச்சியின் வருகை பலன் கொடுக்கும் விதத்தில் அமைந்தால் கட்டுப்பாட்டு சுற்று. அவ்வாறு இல்லாமல், அளவுக்கு மிஞ்சிய தீமை செயல்பாடாக அமையுமாயின், பேத்தி தன் எதிர் வினையினை ஆச்சியின் மீது காட்ட ஆரம்பிக்கும், அது எதிர்வினைச் சுற்று.
எதிர்வினைச் சுற்று:
காட்டுப்பாட்டுச் சுற்றின் அம்புகுறியினை அப்படியே எதிராக மாற்றிவிட்டால், எதிர்வினைச் சுற்று நட்சத்திரம் வந்துவிடும்.
நிலம் தன் மீது வளரும் மரம், வளரவிடாமல் எதிர்வினை காட்டுகிறது.
காற்று நெருப்பை அணைக்கிறது.
நீர் பெருகி நிலத்தினை மூடுகிறது.
மரம் வேகமாக வரும் காற்றினை தடுக்கிறது.
நெருப்பு நீரினை ஆவியாக்கி இல்லாமல் செய்கிறது.
உடலில் நோய் என்பது ஏதேனும் ஒன்றின் குறைபாடாக இருக்கலாம் அல்லது மிதமிஞ்சிய அதிகமாகவும் இருக்கலாம். குறைவாக இருந்தால், அதன் ஆக்கத்திற்கு தூண்டலாம், அதைப்போல் அதன் விரயத்தினையும் குறைக்கலாம். அதிகமாக இருந்தால் விரயத்தினை அதிகரித்து ஆக்கத்தினை குறைக்க தூண்டலாம்.
ஆக்கச் சுற்று, கட்டுப்பாட்டு சுற்று, எதிர்வினைச் சுற்று ஆகியவற்றினை நன்றாக உள்வாங்கிக் கொண்டால், நாடித்துடிப்பின் மூலம் குறை-மிகையினைக் கண்டுபிடித்து, அதற்கான பூதப்புள்ளியினை தூண்டுவதன் மூலம் எளிதாக நோய்களைக் குணப்படுத்தலாம்.
அடுத்து, நோய் மற்றும் நோய்க்கான காரணம், அதனால் நாடி எவ்வாறு இயங்கும், அதனை எவ்வாறு அக்குபஞ்சர் புள்ளிகள் மூலம் சரி செய்யலாம் என்பதனைப் பார்க்கும் பொழுது மேலும் விவரம் பார்ப்போம்.