புத்தாண்டை வரவேற்போம்
ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீசர் ஜனவரி 1 ஆம் தேதியை ஆண்டின் முதல் நாளாக எண்ணினார். ஜனவரி என்ற பெயர் ரோமானிய கடவுள் ஜனஸ் என்ற பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது. ஜனஸ் என்பது இரண்டு முகங்களை கொண்டது.. ஒரு முகம் முன் புறமாகவும் , இன்னொரு முகம் பின் புறமாகவும் இருக்கும். இதை சீசர் ஒரு ஆண்டு முடிந்து இன்னொரு ஆண்டு தொடங்குவதோடு ஒப்பிட்டு ஜனவரி 1 ஆம் தேதியை ஆண்டின் தொடக்க நாளாக அறிவித்தார். உலகின் பல நாடுகள் வெவ்வேறு நாட்களை ஆண்டின் தொடக்கமாக எண்ணினாலும் ஜனவரி 1 சர்வதேச அளவில் ஆண்டின் முதல் நாளாக ஒத்துக்கொள்ளப்பட்டு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள்:
ஒவ்வொருவரின் சமூக, பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப , புத்தாண்டினை புத்துணர்ச்சியுடன் வரவேற்கின்றனர். சிலர் புத்தாடைகள் அணிந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனக் கொண்டாடுகின்றனர். பொது இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விருந்துக்கு செல்கின்றனர். திரை அரங்குகள், உணவகங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் எல்லா வயதினரும் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். வாழ்த்து செய்திகள் பரிமாறி கொள்கின்றனர். வாழ்த்து அட்டைகள் , பூங்கொத்துக்கள், பரிசு பொருள்கள் என ஒவ்வொவரின் அன்பின் அடையாளங்களும் மாறுபடுகின்றனர்.
சிலரின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பது தொலைக்காட்சி பெட்டியோடு முடிந்து விடுகிறது. விடுமுறை நாளை சிறப்பு நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்களோடு முடித்து கொள்கின்றனர். பெரிய பெரிய மாநகரங்களான மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் பெரிய திரை நட்சத்திரங்களை வைத்து கலைநிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். பலர் இது போன்ற நிகழ்ச்சிகளை விரும்பும் போதும் சிலர் தங்களின் உறவுகளோடும், நட்புகளோடும் கொண்டாடுவதையே விரும்புகின்றனர். எது எப்படியோ பழைய கசப்பான அனுபவங்களை மறந்து மகிழ்ச்சியோடும் , புத்துணர்ச்சியோடும் புத்தாண்டை வரவேற்கவே இத்தகைய கொண்டாட்டங்கள்.
புத்தாண்டு தீர்மானங்கள்:
ஒவ்வொரு புத்தாண்டிற்கும் பலர் பல விதமான தீர்மானங்கள் எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் அந்த தீர்மானங்கள் எல்லாம் புத்தாண்டு கொண்டாட்டத்தோடு காற்றில் பறந்து விடும். மிக சிலரே அதை காப்பாற்றுவார். பொய் சொல்லாமல் இருப்பது, தீய பழக்க வழக்கங்களை விடுவது, உடல் எடையை அதிகரிப்பது, அல்லது குறைப்பது, குடும்பத்திற்கென நிறைய நேரம் ஒதுக்குதுதல், கடன் வாங்காது இருப்பது , புதிதாக ஏதாவது ஒன்றை கற்று கொள்ளுவது, பிறருக்கு உதவுவது போன்றவையே பெரும்பாலும் புத்தாண்டு தீர்மானங்களாக இருக்கும்.
தீர்மானங்களை நிறைவேற்றும் வழிமுறைகள்:
தீர்மானம் எடுக்கும் முன் எந்த தீர்மானம் நமக்கு தேவையானது என்றும் , எந்த காரணத்திற்காக தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் சிந்திக்க வேண்டும். பொதுவாக அல்லாமல் குறிப்பிட்டு இதை செய்தே ஆக வேண்டும் என்ற இலக்கை ஏற்படுத்திக் கொண்டால் தீர்மானங்கள் நிறைவேற்ற படலாம். சிலர் இந்த ஆண்டில் தனது எடையை அதிகரிக்கவோ, குறைக்கவோ திட்டமிட்டு இருக்கலாம். ஜூன் மாதத்துக்குள்ளாக 5 கிலோ அதிகரித்து இருக்க வேண்டும் போன்ற இலக்கை வைத்துக் கொண்டால் நிறைவேற்ற எளிதாக தோன்றும்.
அடுத்து அதை எப்படி நிறைவேற்றுவது என்பதற்கான வழிமுறைகளையும் திட்டமிட்டு கொள்ளலாம். எடுத்துக்காட்டாக எடையை குறைக்க உணவு கட்டுபாட்டு முறையையும், உடற்பயிற்சி முறையையும் திட்டமிட்டு செய்தால் தீர்மானத்தை அடைய எளிதாக இருக்கும்.
வழிமுறைகளை திட்டமிட்டதோடு நிறுத்தாமல் அதை தினம் கடை பிடிக்க பழக வேண்டும். ஞாபக மறதி காரணமாக நம்முடைய தீர்மானங்கள் மறக்கலாம். அதை உறுதியாக செய்ய வேண்டும் பொருட்டு வீட்டில் தன் துணையிடமோ, பெற்றோரிடமோ, பிள்ளைகளிடமோ நிறைவுறுத்தும் படி சொல்லலாம். இன்றைய அறிவியல் வளர்ந்த கால கட்டத்தில் நினைவுறுத்த கைபேசி கூட நமக்கு உதவும்,
சில மாதத்திற்கு பின்பு நம்மை நாமே சோதித்து பார்க்க வேண்டும். இலக்கை அடைய முடியாவிட்டால் சில நேரங்களில் உங்கள் சூழல் கூட காரணமாக இருக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப வழிமுறைகளை மாற்றலாம். கடிமான தீர்மானங்கள் எடுத்து இருக்கும் போது சில நேரங்களில் முழுதாக நிறைவேற்ற படாவிட்டாலும் , பாதியாவது நிறைவேற்றப்பட்டு இருந்தால் உங்களை நீங்களே தட்டி கொடுத்து உற்சாகம் ஊட்டிக்கொள்ளுங்கள்.
சமூக சீர்கேடுகள்:
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் மது அருந்தி வம்பு சண்டை வளர்ப்பது, டேட்டிங் என்ற பெயரில் ஊர் சுற்றுவது இப்போது சகஜமாகி விட்டது. பெரிய மாநகரங்களில் பாலின வேறுபாடு இல்லாமல் ஆண் பெண் இருவருமே மது அருந்தி விட்டு ஆட்டம் போடுகின்றனர். காவல் துறையினர் பாதுகாப்புக்காக இறக்கப்பட்டிருக்கும் போதும் பொது மக்கள் இது போன்ற பிரச்சனைகளால் பாதிக்கபடவேண்டிய நிலை நீடித்தே இருக்கிறது.
முடிவுரை :
எது எப்படியோ புத்தாண்டை உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்க தயார் ஆகுங்கள். உங்களின் புத்தாண்டு தீர்மானத்தையும் நீங்களே ஆழ்ந்து சிந்தித்து தீர்மானியுங்கள். வழிமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை உங்கள் கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் பிறரை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஆண்டு மட்டுமல்லாது வரவிருக்கும் ஆண்டுகள் அனைத்தும் நம் அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.