இயற்கை உணவு பழக்கம்

எங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.
Post Reply
User avatar
Thangamstl
Posts: 37
Joined: Mon Apr 21, 2014 10:24 am
Cash on hand: Locked

இயற்கை உணவு பழக்கம்

Post by Thangamstl » Mon May 19, 2014 6:25 pm

இன்று இளம் வயதில் வரும் பல நோய்களுக்கு காரணம் நம்மிடையே மாறி வரும் உணவு பழக்கவழக்கங்கள் தான். அந்த காலத்தில் காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு வெறும் நீராகரம் மட்டும் அருந்திவிட்டு வயலுக்கு சென்றார்கள் என்றால் மதியம் வரை ஒயாத உழைப்பு, பின் மதியம் சாப்பிட்டு விட்டு சிறு ஓய்வு, அதன்பின்பு கடுமையான வேலை மாலை வரை அதன்பின் இரவு நேரமே சாப்பிட்டு விட்டு நல்ல நிம்மதியான உறக்கம் என ஒரு முறையோடு வாழ்ந்தனர்.

ஆனால் இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர்களின் ஒட்டத்திற்க்கு தகுந்தவாறு தங்களின் உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டனர். நேரம் தவறி சாப்பிடுவது, தண்ணீர் முதற்கொண்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது என நம் உணவுபழக்கம் மாறிவிட்டது. வெளிப்புற தோற்றத்திற்க்கு அதிக முக்கியத்துவம் தரும் நாம் சாப்பிடும் உணவுகளில் அக்கறை எடுத்து கொள்வதில்லை. இன்று நாம் சாப்பிடும் உணவுகளில் கெமிக்கல்கள் இல்லாத பொருளே இல்லை. இது நகரம் மட்டுமில்லாமல் கிராமம் வரை பழகிவிட்டது.

ஒரு சிறிய உதாரணம், நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு தரும் குளிர்பானங்கள். முன்னர் நம் வீட்டில் எலுமிச்சை சாறில் தயாரிக்கப்படும் ஜூஸ்கள் தான் கொடுத்து உபசரிப்போம். ஆனால் இப்போது கடையில் விற்க்கும் குளிர்பானங்களை தான் கொடுக்கிறோம். இப்படித்தான் நமது வாழ்க்கை அவசரகதியாக போய்கொண்டிருக்கிறது. நம் கலாச்சாரத்தை பார்த்து மற்ற உலக நாடுகள் வியந்து கொண்டிருக்கும் போது நாம் நம் சுயத்தை தொலைத்து விட்டு நம் வருங்காலத் தலைமுறையினருக்கு தவறான பாதையை கற்று கொடுத்து கொண்டிருக்கிறோம். இதிலிருந்து மாற வழியில்லையா? என்று கேள்வி கேட்டால் பதில் "இருக்கிறது" என்பது தான். அதுதான் இயற்கை உணவு பழக்கம்.


இயற்கை உணவு என்பது நாம் வாழும் இடம், அந்த இடத்தில் வளரும் அல்லது அந்தந்த காலங்களில் கிடைக்கக்கூடிய விளைபொருட்கள் சார்ந்து உருவாக்கப்பட்டது தான் நம் உணவு பழக்கமுறை. அதைத்தான் நம் முன்னோர்கள் காலம்காலமாக கடைபிடித்து வந்தனர். அவர்களது உணவு பழக்கத்தை பின்பற்றினால் நாம் மருத்துவமனை செல்ல தேவையில்லை. நாம் ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு சாப்பிடுகிறோம். அதை ஒரு வேளை சமைக்காத உணவு, ஒரு வேளை அரிசி, சர்க்கரை , உப்பு சேர்க்காத உணவு , ஒரு வேளை எண்ணெய் இல்லாத ஆவியில் வேகாத உணவு என பிரித்து எடுத்து கொண்டால் சில நாட்களில் பல மாற்றங்களை நம் உடலில் காணலாம்.


வேகாத உணவு என்றால் பழ வகைகள், பச்சையாக இருக்கும் காய்கறிகள், கீரைகள், கேரட், பீட்ரூட், தக்காளி போன்ற காய்கறிகள் உடலுக்கு தேவையான சத்தினை கொடுக்கும். அசைவம் சாப்பிடுவதை விட இவற்றில் மிகுந்த சத்துகள் உள்ளன. அது மட்டுமில்லாமல் எளிதாக ஜீரணமும் ஆகிவிடும். தவிர்க்க வேண்டிய உணவுகள் என்றால் அரிசி, மைதா, பால், உப்பு, சர்க்கரை ( அஸ்கா ) ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் அவசியம். இன்று இளம் வயதினரும் கூட மூட்டுவலி,உடல் எடை அதிகரித்தல், தலைமுடி உதிர்வது, சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகிறார்கள். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளால் தான் இந்த பிரச்சனைகள் வருகிறது.இயற்கை மருத்துவத்தில் சில சமயம் ஒரே மருந்து கூட பல பிரச்சனைகளை தீர்க்கும்.காய்கறிகளை கழுவிய பின் நறுக்க வேண்டும்.நறுக்கியபின் கழுவினால் அதன் சத்துகள் நீரோடு போய்விடும். அதேபோல கேரட், ஆப்பிள், வெள்ளரி போன்றவற்றை கழுவிய பின் கடித்து சாப்பிட வேண்டும்.தோல் நீக்கியும், நறுக்கியும் சாப்பிடுவது தவறு. இப்படி இயன்றவரை இயற்கை உணவு, இல்லாத போது சமைத்த உணவு என நம் வழக்கத்தை மாற்றிக்கொண்டால் விரைவாக நாம் நோயற்ற வளமான வாழ்க்கைக்கு நாமும் நம் சந்ததிகளையும் அழைத்து செல்லலாம்.

:great:
Post Reply

Return to “படுகை ஓரம்”